திங்கள், 18 ஜூலை, 2016

தமிழே அருள்வாய் !




ஒருநாள் அறிந்தேன் ! உயிராய் உணர்ந்தேன் !
திருவாய் மொழிந்தாய் ! திடமாய்க் கலந்தேன் !
கருவாய் வளர்ந்தாய் ! கவியாய்ப் பிறந்தாய் !
உருவால் தமிழாள் ! உயர்ந்தேன் வளமாய் !

மனமோர் குரங்காம் ! மதியோ நிலவாம் !
கனமோர் தலைப்பால் கவியாய்ப் புணைந்தேன் !
இனமாய் இருந்தால் எதுதான் கசப்பாம் ?
சினமோ எழுந்தால் சிரம்தான் ! குலைந்தேன் !

உனையே நினைத்தேன் ! உறவாய் மதித்தேன் !
பனைபோல் வளர்ந்தாய் ! பனிபோல் மறைந்தாய் !
எனையே மறந்தேன் ! இனியார் இருப்பார் ?
நினைவே வளர்வாய் ! நிறைவே தருவாய் !

புவியோ பொதுவாய்ப் புறனே புணைந்தால்,
செவியே செயலால் செவிடாய் இருப்பாய் !
தவியாய்த் தவித்தே தனியாய் இருந்தால்
கவிதான் வருமோ ? கனியாய்க் கரும்பாய் ?

அணைபோல் திரண்டே அறிவே வளர்வாய் !
கணைபோல் விரைந்தே கலையே அருள்வாய் !
இணைந்தே இருப்பாய் இனிதாய்த் தமிழே !
துணையாய் இருப்பாய் ! தொடர்வேன் தொழுதே !

(சந்த விருத்தம்) 
கவிஞர் அருணா செல்வம்
14.07.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக